Saturday, March 21, 2009

இலக்கியத்தில் வாழ்க்கைச் செல்வம்

உள்ளம் பெரும் கோயில்:-

"வெண்ணையுற்று நெய்தேட வேண்டுமோ? தீபமுற்று
நண்ணு கனல் தேடல் நன்றாமோ? - என் மனத்தை
நாடிச் சிவன் இருக்க, நாடாமல் ஊர் தோறும்
தேடித் திரிவதென்ன செப்பு?"

இதன் பொருள்;

கையில் வெண்ணை இருக்கும் போது நெய் தேட வேண்டியதில்லை.விளக்கு இருக்கும் போது தீயினைத் தேடுதல் நன்றோ? தன்னை தியானிக்கின்ற மனதில் விரும்பி தங்கச் சிவனிருக்க,அவரை உள்ளத்தில் தேடிக் காணாமல் தலங்கள் தோறும் தேடுவது ஏனென்று சொல்வாயாக!


நல்லோரும் தீயோரும்:-

"நல்லவர்கள் வாயால் நவிலுமொழி பொய்யாமல்,
'இல்லை'யெனாது உள்ளமட்டும் ஈவார்கள் - நல்லகுணம்
அல்லவர்கள் போ,வா என்று சொல்லி நாள் கழித்தே
'இல்லை'என்பார் இப் பாரினிலே"

இதன் பொருள்;

நல்ல இயல்புடயவர்கள் தம்முடய சொற்களை காத்து,இரப்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாது உள்ளவற்றைக் கொடுப்பார்கள்.தீய குணம் உள்ளவர்கள் இரப்பவர்களை போங்கள், வாருங்கள் என்ற சொற்களைக் கூறி, வீணாகக் காலதாமதம் செய்து, கடைசியாக 'இல்லை' என்று சொல்வார்கள்.


நல்லோர் பண்பு:-

"ஞானம்,பெருமை,நயம், கருணை,உண்மை,அபி
மானம்,பொறுமை,வணக்கம்,உயர் - தானமுடன்,
சற்குணம்,ஆ சாரம்,தகுகல்வி,நீதிநெறி
சற்குணருக்கு உண்டு என்றே சாற்று"

இதன் பொருள்;

அறிவு,பெருமை,நேர்மை,இரக்கம்,பற்று,பொறுமை,பணிவு,மேலான ஈகை என்பவற்றோடு நல்ல தன்மை,ஒழுக்கம்,தக்கபடிப்பு,அறநெறிநாட்டம் என்பன நற்குணம் உடையவர்களிடத்து உள்ள நல்ல பண்புகளாகும்.

பாடிய புலவர்:-
அருணாசலக் கவிராயர்.
(கி.பி.1712 - 1779 )