Tuesday, December 10, 2019

திணை விதைத்தவன் திணை அறுப்பான்


ஓர் உண்மைக் கதை!

ஸ்கொட்லாண்ட் நாட்டில் ஃளெமிங் என்று ஓர் ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் அவர் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, உதவி கோரி ஒரு குரல் அருகில் இருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.

ஃளெமிங் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு, குரல் கேட்ட திசை நோக்கி ஓடினார். அங்கே ஒரு சிறுவன் புதை குழியில் சிக்குண்டு வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

நல்லவேளையாக ஃளெமிங் அச்சிறுவனைக் காப்பாற்றினார்.

அடுத்தநாள், நேர்த்தியாக உடையணிந்த ஒரு பிரபு வண்டியில் இருந்து இறங்கி வந்து ஃளெமிங்கிடம் நேற்று அவர் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தான் என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும், மகனின் உயிரைக் காப்பாற்றியதனால் உங்களுக்கு ஏதாவது கொடுக்க விரும்புகிறேன் என்று கூறினார். அதற்கு ஃபிளெமிங் எதையும் வாங்கிக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். அப்போது ஃளெமிங்கின் மகன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தான்.

அவன் உங்கள் மகனா என்று கேட்டார் பிரபு.

ஆம் என்று பெருமையுடன் கூறினார் ஃளெமிங்.

அப்படியானால் சரி. நாம் இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். என் மகனுக்குக் கிடைக்கும் அதே மிகச் சிறந்த கல்வியை உங்கள் மகனுக்கும் அளிக்கிறேன். அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாம் இருவரும் பெருமைப்படும் படியாக அவன் இருப்பான் என்றார்.

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. பிரபு சொன்னது மாத்திரமன்றி அதைச் செய்தும் காட்டினார். விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளியில் படித்தான்.

லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் முழுவதும் பயன் படும் பென்சிலின்  மருந்தைக் கண்டுபிடித்த சேர். அலெக்ஸ்ஸாண்டர் ஃபிளெமிங் ஆனார்.

பல வருடங்கள் கழிந்த பின் பிரபுவின் மகன் நிமோனியாவால் பாதிக்கப் பட்ட போது இந்த பென்சிலின் மருந்தே அவரைக் காப்பாற்றியது.

அந்தப் பிரபுவின் பெயர் லோர்ட். ரண்டோல்ப். சேர்ச்சில்.

அவரது மகன் சேர். வின்ஸ்டண்ட் .சேர்ச்சில்.

திணை விதைத்தவன் திணை அறுப்பான்.

நம்புங்கள்; நல்லது செய்பவனுக்கு உடனேயோ பின்னரோ நல்லதே நடக்கும்.

பணம் தேவை இல்லை என்பது போல் வேலை செய்.
யாரும் உன்னைப் புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்.
யாரும் உன்னைப் பார்க்கவில்லை என்பது போல் நடனமாடு. 
யாரும் உன்னைக் கேட்கவில்லை எனபது போல் பாட்டுப்பாடு. 
சொர்க்கத்தில் இருப்பது போல் பூமியில் வாழ்!

இறுதியாக ஐரிஷ் வாழ்த்து உங்கள் எல்லோருக்குமாக....

* உங்கள் கைகளில் செய்வதற்கு எப்போதும் ஒரு வேலை இருக்கட்டும்.
* உங்கள் பணப்பையில் எப்போதும் ஓரிரு காசுகள் புழங்கட்டும்.
* உங்கள் ஜன்னலோரம் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்.
* ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்.
* நண்பன் ஒருவனின் கைகள் எப்போதும் உங்களுக்கருகில் இருக்கட்டும்.
* இயற்கையும் இறைவனும் உங்கள் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும். 

No comments: