Wednesday, June 16, 2010

தர்க்கத்திற்கு அப்பால்.....


சிறுகதை
எழுத்தாளர்; ஜெயக்காந்தன்.


வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை.நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம்.தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால் அந்தத் தோல்வியே வெற்றி தான்.ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட'வெற்றி'கள் வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன.

என் வாழ்வையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன்.வழக்கம் போல'தோல்வி நிச்சயம்'என்ற மனப்பாண்மையுடன் போன நான், வழக்கத்துக்கு மாறாக அன்று தோற்றுப் போனேன்.தோல்வி நிச்சயம் என்ற என் மனப் போக்கு தோற்றது.என் வாழ்க்கையே நிர்ணயிக்கப் பட்டு விட்டது.

கற்பனைக்கு எட்டாத ஒரு பேரழகியை ரகசியமாய் மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் எண்ணத்தை நானே பரிகசித்து, பின்னர் ஒரு அசட்டுத் துணிவில், அவளது பரிகசிப்பையும் ஏச்சையும் எதிர்பார்த்துத் தயங்கி, நாணிக் கூசி அவள் சந்நிதியில் நின்று 'உன்னை நான் காதலிக்கிறேன்'என்று முற்றிலும் கூறி முடிக்கு முன்பாக, அந்த வானத்துக் கனவு எனது வார்த்தையை எதிர் பார்த்துப் பல காலம் தவம் கிடந்தவளே போன்று ஆயிரம் முத்தங்களை எதிர் நோக்கிச் சிவந்த அதரங்கள் துடிதுடிக்க என் கரங்களிடையே விழுந்ததற்கொப்பான தோல்வி அது.

இந்த தோல்வியை அல்லது வெற்றியைக் கொண்டாடித் தீர வேண்டும்.ஊருக்குத் திரும்பிய பின் தானே?அல்ல; இப்போதே!நான் ரொம்ப அவசரக் காரன்.

கொண்டாடுவது என்பது பெரிய காரியமா? அது கொள்ளப் பட்ட உள்ளம் தன்னுள் லயித்துக் குதூகலிப்பது.அதன் விளைவாய் ஏற்படும் புற நிகழ்ச்சிகள் பெரிய காரியம் அன்று.கொண்டாட்டத்தைச் சிலர் வானத்தை வண்ணப் படுத்தும் வேடிக்கை நிகழ்த்திக் கொண்டாடுவார்கள்.சிலர் நாலு பேருக்கு வயிறார உணவளித்துக் கொண்டாடுவார்கள்.இன்னும் சிலர் அந்தப் பொழுதிலாவது தன் வயிறார உண்டு மகிழ்வார்கள்.அதெல்லாம் அப்போதிருக்கும் அவரவர் சக்தியைப் பொறுத்தது.எனினும்,மனசில் ஏற்படும் அனுபவம் அனைவர்க்கும் ஒன்று தான்.

இப்பொழுது என் நிலைமை பையிலிருக்கும் ஒரு வெள்ளி ரூபாய் நாணயம் தான்.அதெற்கென்ன?இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே! அது தான் முடியாது.ஊருக்குப் போக முக்கால் ரூபாய் வேண்டும்.அதனால் தான் என்ன?கால் ரூபாயில் கொண்டாட முடியாதா?நிச்சயம் முடியும்.

சங்கரய்யர் ஹொட்டலில் புதுப்பால் புது டிகாக்ஷன், சர்க்கரை கம்மி, ஸ்டாங்கா ஒரு கப் காப்பி இரண்டணா தான்.காப்பி அருந்தியதும் உடம்பில் ஒரு தெம்பும் மனசில் ஒரு தனிக் குதூகலமும் பிறந்தன.ஊர் திரும்ப ஒதுக்கி வைத்த பன்னிரண்டணா போக கையில் இருக்கும் இரண்டணாவை என்ன செய்யலாம்? 'கடசிச் சல்லியையும் ஒரு ராஜாவைப் போல செலவு செய்'என்ற பழ மொழி நினைவுக்கு வந்தது.

'ஐயா,தர்ம துரை-கண்ணில்லாத கபோதி ஐயா...!' என்ற குரல்.ஸ்டேசனுக்குள் நுழையுமிடத்தில். ஓர் ஓரமாய் அந்தக் குருட்டுப் பிச்சைக் காரன் உட்கார்ந்திருந்தான்.கிழவன்.அவன் எதிரே இருந்த அலுமீனியப் பாத்திரத்தில் வெறும் செப்புக் காசுகளே கிடந்தன.அவற்றின் நடுவே நான் போட்ட இரண்டணா வெள்ளை வெளேர் என இருந்தது அழகாய் தானிருந்தது.குருடன் அதை எடுத்துத் தடவிப் பார்த்தவாறே, நான் இருப்பதாக அவன் நினைத்த திசை நோக்கிக் கரம் குவித்து, 'சாமி, நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியமுண்டு'என்று வாழ்த்தினான்.அதன் பிறகு உண்மையிலேயே நாலணாவில் அந்த நல்ல நாளைக் கொண்டாடி விட்ட நிறைவு பிறந்தது எனக்கு.

புக்கிங் கவுண்டரின் அருகே போய் என் சொந்தக் கிராமத்தின் பெயரைச் சொல்லிச் சில்லறையை நீட்டினேன்.டிக்கட்டை எதிர்பார்த்து நீண்டிருந்த என் கைக்குள் மீண்டும் சில்லறையே விழுந்தது.

'இன்னும் ஓரணா கொடுங்க சார்'

'பன்னிரண்டணா தானே?'

'அது நேற்றோடு சரி.இன்றிலிருந்து அதிகம்.'

என் கை சில்லறையோடு வெளியே வந்தது.திடீரென்று பாதாளத்தில் விழுந்து விட்டதைப் போன்ற திகைப்பில் நின்று விட்டேன்.'யாரிடம் போய் ஓரணா கேட்பது?'

அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே, அவரிடம்...' என்று நினைக்கும் போதே 'ஓரணா தானே கேட்டால் தான் என்ன'என்று நினைக்கும் போதே ,கேட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது.அங்கே யாரோ ஒருவன் அவரருகே சென்றான்.அவன் என்ன கேட்டானோ....? அவர் சொன்ன பதில் உலகத்துக்கே கேட்டது.எனக்கும் உறைத்தது.இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம் ஆகவில்லை.. ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்து விட்டதை எண்ணும் போது மனம் என்னமாய் வாழ்க்கையோடு தர்க்கம் புரிகிறது?

'அதோ அந்தக் குருடனின் பாத்திரத்தில் செப்புக் காசுகளின் நடுவே ஒளி விட்டுச் சிரிக்கிறதே இரண்டணா அது என்னுடையது.'

அது எப்படி உன்னுடையதாகும்? நீ கொடுத்துவிட்டாய் அவன் வாழ்த்தி விட்டான்.

இப்ப சந்தியில் நிற்கிறேனே?அதில் ஓரணா கூடவா எனக்குச் சொந்தமில்லை? அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா? கேட்டால் தருவானா? தர மாட்டான்.அவனுக்கு எப்படித் தெரியும் அதைப் போட்டவன் நான் என்று?

எடுத்துக் கொண்டால்...? அதோ ஒராள் ஓரணா போட்டு விட்டு அரையணா எடுக்கிறானே!அது போல ஓரணாவைப் போட்டு விட்டு என்னுடைய ரண்டணாவை எடுத்துக் கொண்டால்...?

இது திருட்டல்லவா?

திருட்டா? எப்படியும் என் பக்கத்திலிருந்து தர்மமாக ஓரணா கிடைக்குமே! அந்த ஓரணா புண்ணியம் போதும்.என் காசை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று பொருளாதார ரீதியாகக் கணக்கிட்டுத் தர்க்கம் பண்ணிய போதிலும் திருடனைப் போல கை நடுங்குகிறது.ஓரனாவைப் போட்டேன்.இரண்டணாவை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.

அடப்பாவி - திரும்பிப் பார்த்தேன்.குருட்டு விழிகள் என்னை வெறிக்க வாழ்த்தத் திறந்த வாயால் சபிப்பது போல் கேட்டான்.

'சாமி இது தானுங்களா தர்மம்? யாரோ ஒரு புண்ணியவான் இரண்டணா போட்டாரு.அதை எடுத்துக்கிட்டு ஓரணா போடறியே?குருடனை ஏமாத்தாதே.நரகத்துக்குத் தான் போவே'

நெருப்புக் கட்டியைக் கையிலெடுத்தது போல் அந்த இரண்டணாவை அலுமீனியத் தட்டில் உதறினேன்.இப்பொழுது என் கணக்கில் மூன்றணா தர்மம்.

'தெரியாமல் எடுத்துட்டேன்.'என்று சொல்லும் போது என் குரலில் திருட்டுத்தனம் நடுங்கியது.

ஒரு பெண் அரையணா போட்டு விட்டு காலணா எடுத்துச் சென்றாள்.குருடன் உடனே இரண்டணா இருக்கிறதா என்று தடவிப் பார்த்தான்.அப்படிப் பார்த்த போது அது இல்லாதிருந்து தான் நான் சிக்கிக் கொண்டேன் என்று புரிந்தது.அது அவனுக்குக் கிடைக்காமல் கிடைத்த செல்வம்.விட மனம் வருமா?

நான் யோசித்தேன்.

அது அவன் பணமா?

ஆமாம்.

நான் தானே தந்தேன்.

காசைத்தான் கடன் தரலாம்.தர்மத்தைத் தர முடியுமா? தர்மத்தை யாசித்துத் தந்தால் தான் பெற வேண்டும்.

வெகு நேரம் நின்றிருந்தேன்.நான் போக வேண்டிய ரயில் வந்து போய் விட்டது.அடுத்த வண்டிக்கு இன்னும் நேரமிருக்கிறது.தருமத்தின் பலனை அடுத்த ஸ்ரேசன் வரை கால் வலிக்க நடந்து அனுபவித்தேன்.

சில வருஷங்களுக்கு முன் தமிழ் நாட்டில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அது, அன்று நான் போக இருந்து தவற விட்ட ரயில் தான்.

அந்த விபத்தில் இருந்து நான் எப்படித் தப்பினேன்?தருமம் காத்ததா?

எனக்குத் தெரியாது.இதெல்லாம் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது.



எழுத்து உருவாக்கம்: எழுத்தாளர் ஜெயக்காந்தன்.

நன்றி ஆனந்த விகடன்.
05.11.1961.
மறு பிரசுரம் ஆனந்தவிகடன்.
4.11.09.பக்:75.

(தமிழ்முரசுஅவுஸ்திரேலியாவுக்காகப் 16.06.2010பதிவு செய்யப் பட்டது)

Wednesday, June 2, 2010

மகா பாரதத்தில் ஒரு துளி


சுக்கிராச்சாரியார் அரச குரு. அவரது மகள் தேவயாணியும் அரசன் மகள் சர்மிஷ்டையும் வனத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்கு வாதம் ஒன்றில் இளவரசி தேவயாணியைப் பார்த்து 'நீ என் தந்தையிடம் கையேந்திப் பிழைக்கும் யாசகனுடைய மகள்' என்று கூறிவிட்டாள்.அது அரச குருவின் மகளுக்கு மிகுந்த ரோசத்தை கொடுத்து விட்டது.

அவள் வீடு செல்ல மனமின்றி மரத்தடியில் தங்கி விட்டாள். மகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த சுக்கிராச்சாரியார் மகளின் நிலையறிந்து மிகத் துக்கப் பட்டு அவ்விடம் வந்து சேர்ந்தார்.அவளைப் பாசம் மீதுர அணைத்துக் கொண்டு,

"துக்கமும் சந்தோசமும் வெளி நிகழ்ச்சிகளில் இல்லை.நீ யார் பேரிலும் கோபிக்காதே.பிறருடைய குண தோசம் நமக்கு ஒரு தீங்கும் இழைக்க முடியாது" என்று சொன்னார்.

இவ்வாறு, மகாபாரதம் நிறைய வாழ்வின் சூட்சுமங்கள் புத்தகத்தின் பக்கங்கள் முழுக்கச் சிந்துண்டு கிடக்கின்றன.

மகாபாரதம்; ராஜாஜி;பக்;26;வானதி பதிப்பகம்.