Saturday, August 1, 2009

அக விழி

மகிழ்ச்சிக்கு ஒரு பயிற்சி:-

நம்முடய மனதுக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி நமக்குள் நாமே உள் நோக்கிப் பார்த்தல் ஒரு ஆரோக்கியமான செயற்பாடு.தேவையற்ற சிந்தனைகளை களையவும் மனம் அமைதி கொள்ளவும் இப்பழக்கம் மிகவும் உதவியாக இருக்கும்.

ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி ஒரு பார்வையாளராக இருந்து உங்கள் மனதுக்குள் எவ்வாறான சிந்தனைகள் ஓடுகின்றன என்று வேடிக்கை பாருங்கள்.மிகவும் சுவாரிஸமாக இருக்கும். நீங்கள் யார் என்பதை அது உங்களுக்கு உணர்த்தும். சரி, பிழைகள் தெரிய வரும்.இது பற்றி யாரோடும் நீங்கள் பேச வேண்டியதில்லை. இது முதன் முதலாக உங்களை நீங்கள் கண்டு கொண்ட நிகழ்வு.நீங்கள் யார் என்பதை அது உங்களுக்குச் சொல்லும்.

அவர் எவ்வாறானவராக இருந்தாலும் பறவாயில்லை.கொஞ்ச நாட்களுக்கு அந்தக் 'குழந்தையைக்' கவனித்து வாருங்கள்.உங்கள் மனம் சஞ்சலப்படுகின்ற பொழுதுகளில்,உணர்வுகளின் வசப் படுகிற பொழுதுகளில் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து உள்நோக்கிப் பார்த்து உங்களைச் சாந்தப் படுத்துங்கள்.உங்கள் குறை நிறைகள் பற்றி அது உங்களோடு பேச ஆரம்பிக்கும். அழும்,பேசும்,விம்மும்,அடி வாங்கிய குழந்தையாய் உங்களோடு கோவித்துக் கொள்ளும்.உங்களுக்கு சரி பிழையை,என்ன அதனுடய தேவை என்பது பற்றி எல்லாம் அது உங்களுக்குச் சொல்ல ஆரம்பிக்கும்.உண்மையில் அது ஒரு திவ்யமான குழந்தை என்பதையும்; அடிப்படையில் அன்பினையே அது வேண்டி நிற்கிறது என்பதையும் நீங்கள் கண்டு கொள்ளக் கூடும்.உங்கள் உணர்வுகளையும் தாண்டி,அது சொல்லுகின்ற தர்மத்துக்குச் செவி கொடுங்கள்.அந்த தர்மத்தின் வழி செல்லுங்கள்.
அது கேட்பதைக் கொடுத்து சினேகிதம் கொள்ளுங்கள்.உற்ற தோழனாய் கூடவே இருங்கள்.

இனி உங்கள் முகத்தில் அந்தக் குழந்தையின் ஒளி மிளிரக் காண்பீர்கள்.

கடவுள் உங்களோடு துணை வருவது தெரியும்.